வெள்ளி, 20 டிசம்பர், 2024

காலம் கடந்து காத்துக் கிடக்கும்

கதை சொல்லவும் ஆள் இல்லாம'
கதை கேட்கவும் ஆள் இல்லாம'
காலம் கடந்து காத்து கிடக்கும்' நம்ம நாட்டு திண்ணைகள்

வியாழன், 19 டிசம்பர், 2024

துண்டாகிக் கிடந்தது வீராப்பு கவிதை

மணப்பெண்ணுக்கு பொட்டு வைக்கத்

தேடியபோதுதான்

மண்டபத்தில் தாய்மாமனைக்

காணவில்லையென்று அறிந்தது

மணமேடை.....

பத்திரிக்கையில்

தன் பெயரைச் சேர்க்கவில்லையென்ற

கோபத்தை

கல்யாணத்தை புறக்கணித்தலால்

ஈடு செய்ய முனைத்திருந்த தாய்மாமன்

மண்டப வாசலில்

முறுக்கிக் கொண்டு நின்றிருந்தார்

கையைப் பற்றிய

மச்சானின் அழைப்பை உதறிவிட்டு

தங்கையின் அழுகையை

தரையில் எறிந்தார்

பங்காளிகள் பஞ்சாயத்தை

சொம்போடு வீசினார்

யார் பேச்சுக்கும் மசியாமல்

வீராப்பு காட்டியவரை.

மாமா ....என்றழைப்பில்

கண்ணீர் கசியச் செய்த மணப்பெண்

மணமேடை இறங்கியிருந்தாள்

நீ எதுக்கும்மா மேடைய விட்டு வந்த என்று

துண்டு கீழே விழுந்தது தெரியாமல்

உருகியோடியவர்

பொண்ணை மணமேடையில்

நிறுத்தியபோது

நல்ல நேரம் துவங்கியிருந்தது

நான் கோபப்படும் உரிமையை

நீதானம்மா கொடுத்த என்றபடி

தாய்மாமன் சீர் செய்தவரின்

காலில் விழுந்து வணங்கிய மணப்பெண்ணின் நெற்றியில்

அழுத்தமாய் பொட்டொன்று வைத்தார்

ஒட்டிக்கொண்டது இரத்த சொந்தம்

மண்டப வாசலில்

துண்டாகிக் கிடந்தது வீராப்பு.

தாய் மாமானும் தாய்க்கு நிகர்

என உணர்த்தியது..

புதன், 18 டிசம்பர், 2024

செல்லம்மாள் பாரதியாக இருப்பது எவ்வளவு வலி மிகுந்தது?

பாரதியாக இருப்பதை விட செல்லம்மாள் பாரதியாக இருப்பது எவ்வளவு வலி மிகுந்தது?

பாரதியின் நினைவு நாளையொட்டிய பதிவு...

இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள்.

பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ!

1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்' என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.

“ஊருக்குப் பெருமை என் வாழ்வு.

வையகத்தார் கொண்டாட 
வாழ வேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்த தென்னவோ உண்மைதான்.

இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. 

இன்று மகாகவியின் மனைவியாக போற்றப்படும் நான், அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்...

விநோதங்கள் 
என் வாழ்க்கையில் அதிகம். 

உலகத்தோடு ஒட்டி வாழ 
வகை அறியாத கணவருடன் 
அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.

யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம், ஆனால் கவிஞன் மனைவியாய் இருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே தனி. 

உண்பதிலும், உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை.

கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?

வறுமை, கவிஞனின் 
தனி உடைமை. 

கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது.

காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்கு சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிகாலம் கழித்தானே யானால், என்ன செய்ய முடியும்?

கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; 

அவனுக்கு எதுவும் பெரிதில்லை. 

ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்?

சிறு வயதில் ஆசாபாசங்களும், அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? 

சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது.

அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிட மிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக் கிறது.

ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். 

ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா? 

கவிஞர்களில் பலதரப் பட்டவர்கள் இருக்கிறார்கள்.

கடவுளை பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களை
புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை.

எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர்.

அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். 

கவிதை வெள்ளத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்குமுறை. 

குடும்பமே தொல்லைக் குள்ளாகியது.

ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக் கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.

காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். 

ஸ்நானம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதத்தில் அமையும்.

சூரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. 

வெளியிலே நின்று நிமிர்ந்து சூரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல்.

சூரியகிரணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். 

காலைக் காப்பி, தோசை பிரதானமா யிருக்க வேண்டும் அவருக்கு. 

தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும், குருவியும் 
அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள்.

எதை வேண்டு மானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை.

சிஷ்யருக்குக் குறைவு இராது. 

செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை.

கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். 

களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். 

அதுதான் கவலை!

இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. 

எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. 

இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.

புதுவை எனக்குச் சிறைச்சாலை ஆகியது. 

சிறைச்சாலை என்ன செய்யும்? 

ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். 

எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு.

ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்கு சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.

புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. 

புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, 
புதுக் கவிதை இவை தோன்றின.

இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன்.

பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா, வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, 
பெண் விடுதலை அவசியம் என்ற முடிவுகண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.

இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்டபாடு சொல்லுந் தரமன்று.

புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், 
தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார்.

நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின.

மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறுகளும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றை யெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.

மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். 

தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று.

தூங்கிக் கிடந்த தமிழரை விழிப் புறுத்தியதும் அதிசயமன்று; 

ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது.

விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டி யிருக்கிறது.

தேசியகவியின் மனைவியின் தரம், தெளிவுபட உரைக்கும் சொல் வன்மை அன்னையை மனதார வியக்க செய்கிறார்
பாரதியின் செல்லம்மாள்..!