வெள்ளி, 13 அக்டோபர், 2023

குள்ளக்கோம்பை கன்னிமார் மழைமாலை




காப்பு

  • உலகம் உயிர்பெறவே
  • ஒற்றைகொம்பு உமைமகனே
  • கன்னிமார் மழைமாலை
  • கருணைதர வந்து கா.

 நூல் 
1
  • காக்கும் தெய்வமென்று
  • காலடைந்தோம் கன்னியரே
  • காக்கை குருவியோடு கதியிலா
  • மக்களுக்கு மழைதரவா.
2
  • நிழல்தேடி வந்தபிள்ளையை
  • அழவைத்த தாயுமில்லை-உனைஅல்லால்
  • அழுதுவந்த நீர் துடைத்து
  • அது மாற்றும் தெய்வம் இல்லை.
3
  • நிலங்கீறி நீருக்கேங்கும்
  • நீள்தென்னை உயிருக்கேங்கும்
  • மாடாடு மலைகேங்கும்
  • மனிதர்எல்லாம் பார்வைக்கு ஏங்கும்.
4
  • தம்பரம்பாதை புழுதிமண்ணோ
  • தாய்கருணை தண்ணிக்கு ஏங்கும்
  • தறிகெட்டு பிழையே செய்து
  • தாய்அருளென்று கோட்டை ஏங்கும்
5
  • பஞ்சத்தில் பதைத்தே அம்மா
  • நெஞ்சமெல்லாம் நாடோடி ஏங்கும்
  • நீள்கலப்பை வேலைஇன்றி
  • நெடுமர நிழலில் ஏங்கும்
6
  • நினைநம்பி வந்த குடியோ
  • நீகாக்கும் நாளுக்கு ஏங்கும்
  • நெடுமரங்களின் கிளையோ
  • நீர்வார்க்கும் கருணைக்கேங்கும்
7
  • இமைசொட்டும் நீரேயன்றி
  • இலைதுளிர்க்க பசையேஇல்லை
  • உமைதரும் கருணையன்றி
  • ஊர்வாழ வழியோ இல்லை
8
  • கூழில்லை கஞ்சிஇல்லை
  • குடிவாழ குடிநீரில்லை
  • வேலையும் வெட்டியும்இல்லை
  • விழதாங்கும் சுற்றமும் இல்லை
9
  • காளையும் பசுவும்இல்லை
  • கட்டிவைக்க நிழலும் இல்லை
  • குட்டியும் ஆடும் இல்லை-அதுதின்ன
  • குளிர்ந்த செடியொன்றும் இல்லை
10 [[
[[

]] ]]
  • பொட்டலில் பட்டமரமின்றி
  • குட்டிதின்ன பச்சிலைஇல்லை
  • கற்றாழை தீனிஇன்றி
  • காராம்பசுவுக்கு ஒன்றும் இல்லை
11
  • மாரிமழை பெய்யாதோ
  • மக்கள் பஞ்சம்தீர
  • சாரல்மழை பெய்யாதோ
  • சனங்கள் பஞ்சம் மாற
12
  • கும்பிட்ட கைக்கு ஒரு
  • குறையின்றி காத்த தாயே
  • கொலுவிருந்து ஆடிவந்த
  • குள்ளக்கோம்பை கன்னிமாரே
13
  • மாரிமழை பெய்யாதோ
  • மாடுகன்று மேய
  • சாரல்மழை பெய்யாதோ
  • சரளிக்காடு முளைக்க
14
  • சாவிலும் பிறப்பிலும் தாயை
  • நினைச்சவர் பரம்பரை
  • சாமையோ தினையோ தாய்க்கு
  • சமைச்சவர் பரம்பரை
15
  • அறுவடைக்கு முன்பே-பொங்கலிட்டு
  • படைச்சவர் பரம்பரை
  • அழுதகண்ணீர் மாற்ற சன்னதி
  • அடைஞ்சவர் பரம்பரை
16
  • பாரும்தாயே சத்தியத்தை நம்பி
  • பாதைசெதுக்கிய பரம்பரை
  • பாதைவழி செதுக்கி
  • பசியாற்றிய பரம்பரை
17
  • கோப்பைய நாயக்கரோட –கூடி
  • கொண்டாடிய பரம்பரை
  • அரண்மனையில் இருந்து ஊர்கூடி
  • ஆடிவந்தவர் பரம்பரை
18
  • ஆற்றிலே நீராட்டி பூஜைக்கு
  • அழைச்சவர் பரம்பரை
  • அன்னக் குலவைஇட்டு ஆடி
  • அலங்கரிச்ச பரம்பரை
19
  • கோட்டைகட்டிக் கோவில்
  • கட்டிய பரம்பரை
  • கொண்டாடும் உருமிக்கு
  • ஊடாடிய பரம்பரை
20
  • ஏழைகள் எட்டுத்திக்கும்
  • இங்கே வந்து கூடினாரே
  • வாழையடிவாழையாய் எங்களை
  • வாழவைத்த கன்னிமாறே
21
  • பாழாய் போனதம்மா
  • பச்சைபட்டு நெல்லு நிலம்
  • பாரம்மா பாரும் என்றே
  • பதைகுதம்மா மக்கள் உள்ளம்
22
  • நீராய் வழிந்த ஓடை
  • நெடுங்காலம் வறண்டு விட
  • பாலாய் பொழிந்தநிலம்
  • பட்டினியாய் ஓடுதெங்கோ
23
  • காரம்மாகாரும் என்றே
  • கதருமம்மா மக்கள் உள்ளம்
  • பாரம்மாபாரும் என்றே
  • பசியிலே கிடக்குதம்மா
24
  • அழகாய்த் தான்குளிச்சு
  • அங்கலாய்த்து நீநடக்க
  • அம்சமாய் கை கோர்த்து-நீங்கள்
  • அனைவரும் ஆற்றுக்குஓட
25
  • அளந்து முப்பதடி
  • அகலித்த பாதையெல்லாம்
  • அடைத்து வழியடைச்ச
  • அடங்காத பாவிஎல்லாம்
26
  • அழிந்தொழிந்து போவதற்கோ
  • அடங்காத கோபம் கொண்டாய்
  • பிழைஅறியா பிஞ்சு எல்லாம்
  • பிடிசோறுக்கு ஏங்குதம்மா
27
  • பெத்தவளே பெரியவளே
  • பெருமாளின் சோதரியே
  • மூத்தவளே முத்துமாயே
  • மூங்கிலணை மாரியளே
28
  • காப்பவளே கருமாரி
  • கருத்த முடியழகி
  • கண்ணீருக்கு ஓடிவந்து
  • கவலை மாற்றும் கன்னிமாறே
29
  • நீராடும் சோலைஎல்லாம்
  • நெடும்பாறை ஆனதம்மா
  • காராளர் வாழ்ந்தநிலம்
  • கண்ணீரில் வாடுதம்மா
30
  • கோயில்மலைச் சோலையம்மா
  • குள்ளக்கோம்பை காயுதம்மா
  • கொழிஞ்சியும் காஞ்சுவாட
  • கொடுவெயிலாய் ஆனதம்மா
31
  • பாலக்கரட்டு பாதையெல்லாம்
  • பச்சை செத்துப் போனதம்மா
  • செத்தமலைச் செடிகளெல்லாம்
  • இத்தகதி ஆனதம்மா
32
  • மஞ்சமலை காயலாச்சு
  • மாளவெயில் அடிக்குதம்மா
  • மருகிவந்து மாடுகளெல்லாம்
  • மழைவரத்துக்கு ஏங்குத்தம்மா
33
  • சின்னமலை சிட்டும்கூட
  • சிறகடிக்க பயக்குதம்மா
  • சின்னக்குறத்தி அம்மா
  • சிறிதுகண் பாருமம்மா
34
  • பெரியகுறத்தி அம்மா
  • பெரும்பஞ்சம் ஆனதம்மா
  • பேர்பெற்றஊற்று எல்லாம்
  • வரக்காஞ்சு போனதம்மா
35
  • மலைபோல வருவதெல்லாம்
  • பனிபோல போவதென்ன
  • மழைக்கழுது மருகிவந்தோம் –கொஞ்சம்
  • மனம் இறங்கும் கன்னிமாறே
36
  • காப்பவளே கன்னிமாறே
  • காதவழி பாதக்காரி
  • கண்ணழுது நின்றோமம்மா
  • கவலைமாற்றும் கன்னிமாறே
37
  • கோயில்மலைச் சோங்குக்காரி
  • குள்ளக்கோம்பை வீட்டுக்காரி
  • பாலக் கரட்டுக்காரி
  • பத்தினிக்கு காவல்காரி
38
  • தம்பரம் பாதைக்காரி
  • தெம்புதந்து தேத்தும் தெய்வம்
  • அன்னதானப் பூஜைக்காரி
  • உருமிஓசை ஆசக்காரி
39
  • மஞ்சள் பட்டுக்காரி
  • மங்கலப் பொட்டுக்காரி
  • மஞ்சள்மலை கோப்புகாரி
  • மனமிறங்க கெட்டிக்காரி
40
  • குள்ளக்கோம்பை கோட்டைகாரி
  • கொண்டாட்டப்பாட்டுக் காரி
  • தேவராட்ட ஆசைக்காரி
  • சேர்வையாட்ட பூஜைக்காரி
41
  • பலகாததூர தேசக்காரி
  • சமஸ்தானத்து ராஜதெய்வம்
  • பதினெட்டுப் பட்டிக்காரி
  • பலிஎடுப்பதில் ஆங்காரி
42
  • ராஜதானிக்கோட்டைக்காரி
  • வலையபட்டி கூட்டக்காரி
  • தாதபட்டி காவல்காரி
  • சந்தையூர் மந்தைக்காரி
43
  • சங்கு சயண்டிக்காரி
  • சத்தமான கொம்புக்காரி
  • முத்துக்குடைக்காரி
  • முழுநீளக் கொண்டக்காரி
44
  • அட்சணம்பட்டிக்காரி
  • அச்சம் அழிக்கும்தேவி
  • கம்பூத்துபட்டிக்காரி
  • கம்பங்கொல்லை காத்த தேவி
45
  • தெப்பதுப்பட்டிக்காரி
  • தப்புசெஞ்சா தீருமம்மா
  • நாகமலைக் கோம்பைக்காரி
  • கள்ளர்மட எல்லைக்காரி
46
  • ஆணை மணியோசைக்காரி
  • அழகு மயிலழகி
  • ஆங்கார சிங்கக் காரி
  • அடங்காத காளைக்காரி
47
  • அன்ன வாகனக்காரி
  • அழகான கருடக்காரி
  • வராக ரூபக்காரி,வளைக்காரி
  • தங்கச் சிலைக்காரி
48
  • வாகனமோ ஓரேழு
  • வந்த தெய்வமோ மறு ஏழு
  • வாக்குத் தவறாமல்
  • வரவேணும் அருளோடு
49
  • ஒருவீடாய் இருந்து
  • விருவீடாய்ப் பெருக
  • மறுவீடு வந்த
  • விருவீட்டுத் தெய்வம்
50
  • ஒருவீடு மலை வீடு
  • மறுவீடு மரத்தோடு
  • இருக்கும் மனை மண்வீடு
  • இங்கேவா அருளோடு
51
  • ஒருபூசை ஆறோடு
  • ஒருபூசை தெருவோடு
  • ஒரு பூசை மணியோடு
  • ஒரு பூசை மனதோடு
52
  • மஞ்சள் வெயிலோடு
  • மயங்கினோம் உலர்வோடு
  • நெஞ்சம் நிறைவோடு
  • நெருங்கிவா அருளோடு
53
  • பதறினோம் பதிப்போடு
  • பஞ்சமான கையோடு
  • கைஎடுத்தோம் கனிவோடு
  • கண்ணிறைந்த நீரோடு
54
  • அம்மான்னு கூப்பிடவோ
  • அருளோடு நீங்கள் வர
  • ஆத்தான்னு கூப்பிடவோ
  • ஆங்காரம் அமைதிபெற
55
  • தெய்வமேன்னு தேடவோ
  • தேவி உந்தன் அருள்கிடைக்க
  • கடவுளேன்னு கதறிடவோ
  • கண்ணழுகை தான் மறைய
56
  • உடுக்கைப் பம்பை முரசொலிக்க
  • உருமிமேளம்தான் முழங்க
  • சித்தாடைக்காரி காரியம்மா
  • சிரிச்சு முகம் பாருமம்மா
57
  • கண்ணு நிரஞ்சவரே
  • கலக்கம் மாத்தும் கன்னிமாறே
  • காலங் கடந்தவரே
  • கவலை தீக்கும் கன்னிமாறே
58
  • குலம்காக்க வந்தவளே
  • குள்ளகோம்பை நின்றவளே
  • குடிகாக்க அமர்ந்தவளே
  • கோலோச்சும் கன்னிமாறே
59
  • மனசு நிரஞ்சவரே
  • மகமாயி ஏழுருவே
  • நினைச்சு அழுதவர்க்கு
  • நிலை மாத்தும் கன்னிமாறே
60
  • அடைக்கலம் காத்தவரே
  • அருள்கொடுக்கும்கன்னிமாறே
  • அம்மாவென்று அழைத்தவரை
  • அனைச்சிருக்கும் கன்னிமாறே
61
  • நினைச்சவர் காடுகரை
  • நெடுங்காலம் காய்ந்து இருக்க
  • கைகொடுத்து காத்த தெய்வம்
  • கைகட்டி நிற்கலாமோ
62
  • சிரித்தல் முத்துதிரும்
  • சிந்தித்தால் ஞானம் வரும் – நீ
  • பறித்தால் அது தடுக்க
  • பாரில் ஏதும் இல்லையம்மா
63
  • கொடுப்பாய் கொடுப்பாய் என்று
  • கொண்டாட்டம் உனக்கெடுத்தோம்
  • கொடுக்க வந்து கோட்டை நின்றாய்
  • குள்ளக்கோமபை கன்னியரே
64
  • எப்போது மழைகொடுப்பாய்
  • ஏழைஉயிர்ஏங்குதம்மா
  • எப்போது கைகொடுப்பாய்
  • எங்கள் கை உயர்ந்ததம்மா
65
  • எப்போது சரல்வரும்
  • எங்கள் உயிர் சாகுதம்மா
  • எப்போது தூத்தல் வரும்
  • எட்டுத்திக்கும் துடிக்குதம்மா
66
  • காலம் கலிகாலம்
  • கைகொடுக்க ஏது தெய்வம்
  • காலம் கலியானால்
  • கன்றும் மாடும் ஏ துசெயும்
67
  • பாவம் பெரும்பாவம்
  • பலபாவம் மனிதர் செய்தால்
  • பாழும்பசுமாடும்
  • பசிக்குத் தின்ன ஏதுசெயும்
68
  • காக்க வந்த கன்னிமாறே
  • கைநழுவ விட்டீரோ
  • கைகொடுத்த கன்னிமாறே
  • கைகழுவி விட்டீரோ
69
  • பார்த்த நிலம் தரிசாக
  • பார்க்காமல் விட்டீரோ –மக்கள்
  • கால்நடந்து வெளியேற
  • காணாமல் விட்டீரோ
70
  • ஊத்துக்குளி தான்காய
  • உடையவரே விட்டீரோ
  • ஊர்பிழைக்க வெளியேற
  • உயர்ந்தவரே விட்டீரோ
71
  • ஓடையெல்லாம் தான்காய
  • ஒருதாயே விட்டீரோ
  • பஞ்சத்தில் பிழைப்புத்தேட
  • பார்வதியே விட்டீரோ
72
  • மயிலும் இடம்மாற
  • மகமாயி விட்டீரோ
  • மக்கள் பதைத்தோட
  • மாமாங்கம் விட்டீரோ
73
  • அருஞ்சுனையும் அறுந்துவிட
  • ஆற்றுபாறை காத்தாட
  • அடங்காத பஞ்சம் வந்து
  • ஆடித்தான் வச்சாலும்
74
  • ஆத்தா உன் குள்ளக்கோம்பை
  • அது தண்ணீர் வற்றாதே –இங்கே
  • அடங்காத தாகத்துக்கு மடக்குத் தண்ணீர்
  • அகப்படாத இடமாய் ஆனமாயமென்ன .
75
  • தாழை மரம் தூர்ந்துவிட
  • தண்ணீர் வழி தொலைஞ்சழிய
  • பாழும் குடிதண்ணீருக்கு
  • பஞ்சமம்மா உன் கோயிலிலே
76
  • எல்லாரு கோம்பையிலும்
  • நீருண்டு –எங்கள்
  • கன்னிமார் கொம்பையிலே
  • கல்லூத்து காயுதம்மா
77
  • எல்லாரு கோம்பையும்
  • காய்சாலும் –உங்கள்
  • கன்னிமார் கோம்பையே
  • காயலாமோ தேவியரே
78
  • தெற்கெல்லை சின்னமலை
  • தேடிஉன்னை சரணடைந்தோம்
  • வடக்கெல்லை வதிலையிலே
  • மகமாயி உருவமுண்டு
79
  • மேற்கெல்லை நடுக்கோட்டை
  • மேலவரும் மக்களுண்டு
  • கிழக்கெல்லை நடகோட்டை
  • கண்பாரும் எல்லையம்மா
80
  • தென்கிழக்கு கள்ளர்மடம்
  • தேடிவந்தால் அருள் கிடைக்கும்
  • தென்மேற்கு பெரியகோம்பை
  • தேனொழுகும் சுனைகளுண்டு
81
  • வடகிழக்கு கோம்பைபட்டி
  • வந்தாடுவார் ஊரைக்கூட்டி
  • வடமேற்கு எழுவனம்பட்டி
  • எல்லைஉந் தன் எல்லையம்மா
82
  • ஆகாசமோ மேலே எல்லை
  • அடங்ககாத்து அருள்புரிவாய்
  • பாதாளமே கீழே எல்லை
  • பாரும் கண்பாருமம்மா
83
  • காக்கா இளைப்பாற
  • கருவேல நிழலு -மில்ல
  • மக்கள் இளைப்பாறும்
  • மாமரங்கள் காய்ந்ததம்மா
84
  • கொக்கு பசியாற
  • குளங்குட்டை பெருகவில்லை-உன்
  • மக்கள்பசியாற
  • மக்கிப்போன நெல்லுமுண்டோ
85
  • மாடு தொத்த மாடு
  • பாலூத்தி வாழும் வீடு
  • காடு கரை காய்ஞ்சா
  • பசியாறல் எங்கே கூறு
86
  • பூமி பொட்டல் பூமி
  • வானம் பார்த்தே வாழும் பூமி
  • சாமி நீதூங்கிபோனால்
  • கதிவேறு என்ன சாமி .
87
  • கன்று மாடு ஒன்னு – கூட
  • கஞ்சி ஊத்தும் மண்ணு
  • கையெடுத்த தெய்வம்
  • கன்னிமாரென்று ஒன்னு .
88
  • கஞ்சி ஊத்தும் பூமி
  • காஞ்சு போன மாயம்
  • நெஞ்சு பொறுக்கவில்ல
  • வாழவழிகாமி .
89
  • அஞ்சாதே என்று ஓர்நாள்
  • அபிராம பட்டருக்கு சொன்ன
  • செஞ்சொல் இங்கே சொல்லு
  • நெஞ்சங் கொளிர்ந்து போக .
90
  • மதுரா மடைச்சீமை
  • மன்னர் உயிர் காத்து
  • அதிரா முசுராம் படையை
  • அடக்கி முடக்கி அழித்தாய் .
91
  • நீதி இல்லா முசுராம்படையை
  • நெஞ்சம் பதைக்க நசுக்கி
  • பாறையில் குதிரைத்தடம்
  • பதிய பார்வைகெடுத்த தேவி
92
  • ஆயிரம் ஆண்டு முன்னே
  • அம்மா செஞ்ச அருள
  • நெஞ்சம் நம்பி வந்தோம்
  • கொஞ்சம் வாழவழிகாமி
93
  • தருவாய் மழையென்று
  • தந்தோம் பொன் கவிதை
  • வருவாய் மழை தரவென்று
  • வந்தோம் உன்சன்னதிக்கே
94
  • எழுவாய் மனம் கனிய
  • இங்கே வந்த எங்களுக்கு
  • வழுவாய் யாம் செய்ததெல்லாம்
  • வல்லபையேமாற்றிடுவாய்
95
  • கட்டிவந்த படலிதற்கு
  • கண்கனிந்து அருள்வாயோ
  • வெட்டிப் புலம்பலென்று
  • வீணென்று விடுவாயோ
96
  • சொல்லில் உணர்வெடுத்து
  • சொல்லிவைத்தோம் உந்தனுக்கு
  • உளம் கனிந்து உமையவளே
  • ஓகோன்னு மழயருளே
97
  • கண்காணா தேசமெல்லாம்
  • காத்திருக்கும் தேவியரே
  • காலடிக்கு வந்தவரை
  • கவலை தீரும் கன்னிமாறே.

  • மீன்பாறைக்கன்னி, கழைக்கூத்துக்கன்னி, பேழைக்கன்னி,                பூமிக்கன்னி,                      வனகன்னி,                    மலைக்கன்னி                  முனிக்கன்னி,